திருவாரூர், டிச. 23 –
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அத்திருக்கோயிலில் பரமபத வாசல் எனக்கூறப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி அதிகாலை 4.00 மணி அளவில் ஸ்ரீபக்தவத்சல பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து சரியாக 5.00 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அச்சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்வினை முன்னிட்டு ஸ்ரீபக்தவச்சல பெருமாள் நேற்று இரவு மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
அந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள் ஆழ்வார்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.