மீஞ்சூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (61) இவர் கடந்த 1991ல் இருந்து 96 வரை பொன்னேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இவரது மனைவி நிர்மலா அதே காலக்கட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அவர்களுக்கு ஒரே மகள் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இன்று காலை மகளை கல்லூரியில் விடுவதற்காக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் தனது மனைவியுடன் மகளை அழைத்துக் கொண்டு கல்லூரியில் விட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்துள்ளார்.
சரியாக மீஞ்சூர் வண்டலூர் வெளி வட்ட சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
அவ்விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அவரது மனைவி நிர்மலாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
மேலும் அச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர், சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழந்த சம்பவம் பொன்னேரி வட்டாரத்தில் சற்று பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.