செங்குன்றம், ஆக. 21 –

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்துள்ள பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக தற்போது வரை பொறுப்பு வகித்து வந்தார்.

மேலும் பார்த்திபன் பாடியநல்லூர்  ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011 – 2016 ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அதிகாலை அவர் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலின் மைதானத்தில் நடைப்பயிற்சி மேற் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்த போதும் அவரை வழி மறித்த கும்பல் கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அதனை அவரோடு அம் மைதானத்தில் நடைப்பயிற்சி மேற் கொண்டவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும்,  மேலும் அவர்கள் உடனடியாக பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அச்சம்பவயிடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் பார்த்திபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலைத் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்குகளில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார் என்ற தகவலும் தெரிய வருகிறது. பார்த்திபன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தெரிய வருகிறது.

மேலும் இக்கொலைக்கு முன்விரோதம் காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்திபன் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக பரபரப்பு நிலவி வருவதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பாடியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவராக பார்த்திபனின் அண்ணன் மனைவி ஜெயலட்சுமி நடராஜன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here