கும்மிடிப்பூண்டி, செப். 10 –
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம். ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் தனியார் தொழிற்சாலையிலிருந்து திடீரென வெளியேறிய நச்சு வாயுவால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரிந்து வந்த தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் மூச்சுத் திணறல் கண் எரிச்சல் ஏற்பட்டது. அதில் பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்கள் வெங்கடேசன் (26), ஸ்ரீராம் (32), ராமதாஸ் (57), ராமநாதன் (25), தர்மராஜ் (24) ஆகிய ஐந்து பேரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர். மற்ற தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக தொழிற்சாலையை விட்டு வெளியேறி சிப்காட் பிரதான சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், தொழிலாளர்களிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நச்சு வாயுவை வெளியேற்றிய தொழிற்சாலையில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோல் எதிர்வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாது என உறுதி அளித்த பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.. இதனால் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.