பொன்னேரி, டிச. 18 –
பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும் பரவியிருந்த ஆயில் படலம், பழவேற்காடு பகுதிக்கும் பரவி உள்ளதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது வறுமையில் வாடுவதாகவும், ஏற்கனவே மிக்ஜாம் புயல் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் 25 நாட்களுக்கும் மேலாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில், மேலும் தற்போது கலந்துள்ள எண்ணெய் படலத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல முடியாமல் தற்போது மிகவும் வாழ்வதாரம் பாதிக்கப்படுள்ள நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தங்களை அப்பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க போதிய நிவாரணம் வழங்கிட தமிழக அரசுக்கு பொன்னேரி கோட்டாட்சியர் பரிந்துரை செய்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை பழவேற்காடு பகுதி மீனவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாட்சியர் வாகே சங்கெத் பல்வந்த்யிடம் வழங்கினார்கள்.
முன்னதாக பொன்னேரி சாராட்சியராக பணியாற்றிய ஐஸ்வர்யா ராமநாதன் தூத்துக்குடி உதவி ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால், புதிதாக இன்று பொறுபேற்றுள்ள வாகே சங்கெத் பல்வந்த் பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் பணியாளர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அவ் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட சாராட்சியர் தொடர்ந்து பழவேற்காடு பகுதி வாழ் மீனவர்களின் கோரிக்கை மனுவினைப் பெற்றுக் கொண்டு அவர்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் தெரிவித்தார்.





















