குடவாசல், ஜூலை. 17 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள மூலங்குடி, கீழஓகை, தண்டலை முதலான கிராமங்களில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், பல இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் விவசாயிகள் பம்பு செட் மூலம் நீர் எடுத்து குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் இருந்து குடமுருட்டி ஆறு பிரிந்து, சோழசூடாமணி ஆறாக உருவாகி அந்த ஆறு குடவாசல் வரும் பகுதியில் தண்டலை, மூலங்குடி, கீழஓகை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான வயல்களுக்கு, பாசன கால்வாய் மூலம் தண்ணீர் பிரிந்து செல்கிறது. சோழ சூடாமணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளையால் ஆறு பள்ளமாகிவுள்ளது. அதனால், அந்த பாசன கால்வாயில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வயலை அடையாத நிலை உள்ளது. ஆறு அருகில் இருந்தும் பாசனக் கால்வாயில் ஆற்றுத் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
மேலும், பல இடங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறுவைத்தொகுப்பு பல விவசாயிகளுக்கு சரிவர கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதாக தமிழ்நாடு விவசாயி நல சங்க செயலாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
பேட்டி: ராமமூர்த்தி – செயலாளர் (தமிழ்நாடு விவசாயிகள் நல சங்கம்.)