கவரப்பேட்டை, ஜூலை. 13 –

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன் வாழ்த்து வழங்கினார். இதில்,சிறப்பு அழைப்பாளராக அக்கல்லூரியின் முன்னாள் சிவில் இன்ஜினியரிங் மாணவரும், சைனா கன்ஸ்ட்ரக்ஷன் எயித் இன்ஜினியரிங் டிவிஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான தினேஷ்சங்கர் கலந்து கொண்டு தனது அனுபவத்தை மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.

இதில்,சிறப்பு விருந்தினராக டி.ஜே.எஸ். கல்விக்குழுமத்தின் தலைவரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கல்வி நெறி காவலர் டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது, அவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் வேலை செய்து கொண்டே மேல்படிப்பை தொடர முடியும். அவ்வாறு சிறப்பு வாய்ந்தது இந்தபடிப்பு ஆகும். எனவே, இந்தப் படிப்பை தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு முதற்கண் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

மேலும், கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவும், இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ள தினேஷ்சங்கர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இக்கல்லூரியின் மாணவர் ஆவார்.

அவர் படித்து முடித்து ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக தற்போது உள்ளார். எனவேதான் அவர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேடையில் உங்கள் முன் வீற்றிருக்கின்றார்.எனவே, மாணவர்களாகிய நீங்கள் இலக்கை அடைய ஆர்வத்துடன் கடின உழைப்பை மேற்கொண்டால் வெற்றி பெற முடியும் என்றவர் தொடர்ந்து, இன்று மாணவர்களாக உள்ள நீங்கள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மேடையில் சிறப்பு அழைப்பாளராக அமர வேண்டும் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், துறை வாரியாக முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும்,சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இயக்குனர்கள் டி.தினேஷ், டாக்டர் ஏ.பழனி,நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், பெருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், ஆரம்பாக்கம் ஆறுமுகம், பூவலம்பேடு ஜோதிலிங்கம், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here