கும்பகோணம், அக். 03 –
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பம் நிறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அச்செயலைக் கண்டித்து பாஜகவினர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றதை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.
இந்நிலையில் சோழபுரம் கடை வீதியில் பெரியார் சிலை அருகில் திமுக அதிமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சி திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி கொடி கம்பம் அந்த இடத்தில் உள்ளது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கொடிக்கம்பம் வைக்க கூடாது என்று சோழபுரம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பாக கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த மூன்று மாதம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து உள்ளனர்.
இதுவரை கொடி கம்பம் வைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, சோழபுரம் கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பம் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.




















