திருவாரூர், நவ. 30 –
திருவாரூர் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இது சம்மந்தமான கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஒரு மதத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்படுவதாகவும், இதற்கு பின்புலத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாகவும், இச்செயல் மாணவ மாணவியர்கள் மத்தியில் மத பிரிவினையை ஏற்படுத்திடும் என்பதைக் கட்டித்தும், மேலும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்ழக துணைவேந்தர் கிருஷ்ணனை பதவி நீக்கம் செய்யக் கோரியும் பல்கலைக் கழகம் நுழைவு வாயில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத்தலைவர் தினேஷ், மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் ஆகியோரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் துரைஅருள்ராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மத்திய பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினைரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.