குனியமுத்தூர்:

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.கே. புதூரை சேர்ந்த ஒருபெண்ணும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் பாபுராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு பாக்கியம் குழந்தைகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பாபுராஜ் குடிபோதையில் பாக்கியத்தின் வீட்டுக்கு வந்தார். அவரை இங்கு வரக்கூடாது கள்ளக்காதலி வீட்டுக்கே செல்லுங்கள் என பாக்கியம் கூறினார்.

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபுராஜ் பீர் பாட்டிலை உடைத்து பாக்கியத்தை குத்த முயன்றார். இதனை பார்த்த அவர் அங்கு கிடந்த கட்டையால் கணவனின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

கணவரை கொலை செய்து விட்டோமே என்ற பயத்தில் பாக்கியம் தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்து கொசு விரட்டி மருந்து, மாத்திரை மற்றும் பினாயில் ஆகியவற்றை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

அதிகாலை 4 மணியளவில் தாயை தேடி வெளியே வந்த இவர்களது மூத்த மகள் தாய் தந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாபுராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here