தஞ்சாவூர், ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிகம்பத்திற்கு பால், சந்தனம் போன்ற திரவியப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

நான்கு முக்கிய வீதிகளில் மேலதாள வாத்திய கச்சேரியுடன் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தன்னைத்தான் பூஜித்தல் வருகிற 18 ஆம் தேதியும், தேரோட்டம் 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

அன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து 25-ம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழாவில் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லை ஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

மறுநாள் 26 ஆம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன்

6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்குச் சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here