காஞ்சிபுரம், செப். 17 –
நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் இத்திட்டத்தை மதுரையில் துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டாள தெருவில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டவிழா நடைப்பெற்றது.
விழாவில் மாணவர்களுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் உணவை பரிமாறினார்கள். மேலும் இத்திட்டம் குறித்து மாணவர்களிடம் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர் சந்துரு,மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன்,காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.