ராமநாதபுரம், மார்ச் 13-
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவங்கினர்.
ராமநாதபுரம்
வழி விடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, திருமஞ்சன அபிஷேகத்துடன் காப்பு கட்டுதல் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். இதை தொடர்ந்து வண்ண பாராயணம் பாடப் பட்டது. மார்ச் 20 ம் தேதி வரை 9 நாட்களுக்கு தினமும் இரவு ஆன்மிக சொற் பொழிவு, கிராமிய ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 21ம் தேதி காலை ராமநாதபுரம் நொச்சி வயல் ஊரணி கரையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால் குடம், காவடி சுமந்து ஊர்வலமாக வந்து வழி விடு முருகன் கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப் படுகிறது. மார்ச் 21 இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 22ம் தேதி இரவு சுவாமி முருகன் வீதியுலா நடக்கிறது. கோயில் தர்மகர்த்தா சு.கணேசன் தலைமையில் விழா குழுவினர் பங்குனி உத்திரத் திருவிழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழா குயவன்குடி சுப்பையா கோயில், மண்டபம் காந்தி நகர் சண்முக சடாச்சர வேல், ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம முருகன் கோயில், இடையர் வலசைமுருகன் கோயிலிலும் கொடி யேற்றத்துடன் விழா தொடங்கியது.