திருவாரூர், டிச. 27 –
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நேற்று நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசனத்தையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இவ்வாலயத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி வருடத்திற்கு இரண்டு முறை தனது பாதங்களை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலிப்பார். அதில் மார்கழி மாதம் வரும் ஆரூத்ரா தரிசனத்தன்று தனது வலது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் தனது இடது பாதத்தையும் பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதியாகராஜ சுவாமி மற்ற நாட்களில் தனது முகத்தை மட்டுமே காண்பித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது இவ்வாலயத்தின் தனித்துவமாகும்.
அதன்படி ஆரூத்ரா தரிசன விழாவினையொட்டி ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி யதாஸ்தானத்தில் இருந்து ராஜநாராயண மண்டபத்திற்கு நேற்று எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதேப்போன்று ஸ்ரீநடராஜருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.
தொடர்ந்து இன்று காலை அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி பதஞ்சலி-வியக்ரபாத முனிவர்களுக்கு தனது வலது பாதத்தை காண்பித்து அருள்பாலித்தார். அப்போது ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு வேதமந்திர கோஷங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. வருடத்திற்கு இருமுறை மட்டுமே பதஞ்சலி-வியாக்ரபாத முனிவர்களுக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமி பாத தரிசனம் காண்பிக்கும் நிகழ்வை திரளான பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீதியாகராஜ சுவாமியின் பாத கமலங்களை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த பாததரிசனம் இன்று மாலை 3.30 மணி வரை மட்டுமே நடைபெறும்.
ஆரூத்ரா தரிசனவிழாவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீதியாகராஜ சுவாமியின் வலது பாதத்தை தரிசித்து வருகின்றனர்.






















