பொன்னேரி, செப். 17 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பொருட்டும், தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் கிராமத்தில் இயங்கி வரும் அருள்ஜோதி குருகுலம் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வழகி எர்ணாவூரான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பழவேற்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அருள்ஜோதி கல்வி அறக்கட்டளை மாவட்ட பொறுப்பாளர் பாரதி லக்ஷ்மன், திட்ட மேலாளர் நாகரத்னா, தலைமையாசிரியை சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.