சென்னை, ஜன. 11 –

தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாய பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய பயனாளிகளுக்கு அறிவுத்தப் பட்டுள்ளது.

மேலும் இத்திட்டமானது தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அவ் விவசாய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணப்பரிமாற்றம் வாயிலாக வரவு வைத்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள விவசாய பயனாளிகள் இதுவரை 12 தவணைகளாக நிதிவுதவிப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மேலும் அடுத்த 13 வது தவணையாக இப்பயனாளிகள் நிதிவுதவிப் பெற அவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அவர்களுக்கு அறிவுறுத்தல் செய்தியை இன்று அரசு சார்பில் வெளியிடப் பட்டுள்ளது.

மேலும் தற்போது டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலத்திற்கு 13 வது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்காக ஒன்றிய அரசு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பி.எம் கிசான் வலைத்தளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த    ( e – KYC ) வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இத்தவணைத் தொகை வழங்கப்படுமென ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு அப்பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன் பெற வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல்துறை மற்றும் பொதுச்சேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தியும், வீடு வீடாக சென்று ஆதார்  ( e – KYC )  எண்ணை உறுதி செய்வதின் அவசியம் குறித்து அப்பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் நாளேடுகளில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டும் இப்பயனாளிகள் ஆதார்  ( e – KYC )  எண்ணை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசின் இவ்வித தொடர் நடவடிக்கைகளால் இதுவரை 5,27,934 தகுதியான பயனாளிகளின் ஆதார் எண்  ( e – KYC )  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை   உறுதி ( e – KYC )   செய்திடும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை எவ்வாறு உறுதி செய்யலாம் ?

பி.எம்.கிசான் வலைத்தளத்தில் இரு வழிமுறைகளின் படி ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

அதெப்படி என்பதை பி.எம்.கிசான் கவனத்திற்கு …

முதலில் உங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று உங்களின் கை ரேகையை பதிவு செய்து ஆதார் எண்ணை              ( e – KYC )    உறுதி செய்யும் முறையும்,

மேலும் வாய்ப்புள்ள பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பி.எம்.கிசான் வலைத்தளத்திற்குள் சென்று ஆதார் எண்ணுடன் நீங்கள் இணைத்துள்ள கை பேசியின் வாயிலாக பெறப்படும் நான்கு இலக்க எண்ணை ( ஓடிபி ) உள்ளீடு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்திடலாம்.

மேலும் திட்டத்தின் வாயிலாக பயன் பெற்று வரும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட உங்களது வங்கி கிளைகளுக்கு சென்று உங்கள் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா மீண்டும் ஒருமுறை உறுதி செய்து தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியான பயனாளிகளும் பயன் பெற்றிடுமாறு அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here