பொன்னேரி, ஆக. 06 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள மூகாம்பிகை சிலை ஒன்று இருப்பதை அங்கு வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அச்சிலையினை அக்கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள நெல்லூர் அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்து வழிப்பட்டப் பின்னர், பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை, கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் சின்னதுரை அச்சிலையினை மீட்டு வட்டாட்சியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தார். தற்போது வருவாய் துறையின் கருவூலத்தில் அச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அச்சிலை எக்காலத்தை சார்ந்ததெனவும், அச்சிலை எவ்வுலோகத்தினால் செய்யப்பட்டதெனவும், அறிந்துக்கொள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலகத்திற்கு வருவாய்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிய வருகிறது.
மேலும் அச்சிலை எப்படி அப்பகுதிக்கு வந்ததெனவும், காவல் மற்றும் வருவாய்துறை சார்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வின் போது பொன்னேரி உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.




















