மீஞ்சூர், டிச. 31 –
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள் தோறும் பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளைவாயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூட வளாகத்தில் நடைபெற்றது,
அக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.முத்து தலைமை வகித்தார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், துணைத் தலைவர் பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள் வேலு, அமுதா மாதவன், ஊராட்சி செயலர் ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் அக்கூட்டத்தில் அவ்வூர் மக்கள் அளித்த சாலைகள் அமைத்தல் மற்றும் செப்பனிடுதல், குடிநீர் தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தரக் கோரியும், தெரு மின் விளக்குகளை பராமரித்தல் மற்றும் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் புதிய மின் கம்பங்கள் அமைத்திட வேண்டியும், 100 நாள் பணியாளர்களுக்கு மரம் நடும் பணியினை வழங்கிடக் கோரியும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்திட நிதி வழங்கிடக்கோரியும், மழையில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டியும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீதான விவாதங்கள் நடைப்பெற்று அதனை தீர்மானமாக ஏற்றிட எடுத்துக் கொள்ளப்பட்டது. அச்சிறப்பு கிராம சபாக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அவ்வூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.