கும்பகோணம், ஆக. 21 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேல தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் இவர் சுமார் 2 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு போதுமான தண்ணீர் இல்லாமலும் அறுவடையின் போது மழையினால் பாதிக்கப்பட்டும் மிஞ்சிய நெல்லினை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போது, வயலில் இருந்து நெல்லினை வெளியில் கொண்டு செல்ல விடாமல் தடுத்திடும் வகையில் திருப்புறம்பியம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கண்ணன் மற்றும் அதிமுகவை சேர்ந்த டாஸ்மாக் பாண்டியன் ஆகியோர் பாதையில் குழியினைத் தோண்டியும், மேலும் ஜேசிபி இயந்திரத்தை வழிப்பாதையில் மறித்திடும் வகையில் நிறுத்திவிட்டு சென்றுவுள்ளனர். அதனால் விவசாயி சிவசங்கரன் அறுவடை செய்த நெல்லினை வெளியில் கொண்டு செல்ல முடியாமல் தவித்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆதரவோடு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், ஜெயபால், அருளரசன் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் மாவட்ட துணை தலைவர் கணேசன் விவசாய விவசாய சங்க பொறுப்பாளர்கள் பழனிவேல் முருகன் நாகமுத்து ஆகியோர் தலைமையில் வட்டாட்சியரை சந்தித்து அறுவடை செய்த நெல்லினை வயக்காட்டில் இருந்து வெளியே எடுத்து வர விடாமலும் மேலும் பாதிப்பினை உருவாக்கிடும் வகையில் செயல்பட்டு வரும் கண்ணன் மற்றும் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்புகார் மனு மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் அப்புகார் மனு தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சனிக்கிழமை காலை 11 மணியில் நடைபெற்ற அறுவடை நெல் மறுநாள் வரை, இரவு பகல் என பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவ்வயக்காட்டிலேயே கிடந்துள்ளது. அதனால் விவசாயி சிவசங்கரன் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு அமர்ந்து இதற்கு தீர்வு காணவும் எனது உடமைக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தெரிவித்ததாவது விவசாயி சிவசங்கரன் நெல்லை வெளியில் எடுத்து வராமல் அராஜகம் செய்தும் அவருடைய மரங்களை அத்துமீறி வெட்டியும் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மோட்டார் செட்டுகளை முடக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.




















