திருவாரூர், செப். 07 –
முத்துப்பேட்டையில் நேற்று விநாயகர் விஜர்சனம் செய்வதற்கான ஊர்வலம் நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் 3000 திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று சிலைகள் பாமணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டையை சுற்றியுள்ள உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, கோவிலூர் உள்ளிட்ட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு இவ்வூர்வலத்தில் கலந்துக்கொண்டன.
இந்த ஊர்வலம் நியூ பஜார், கொய்யாமுக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்கு உள்ள பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை ஒட்டி திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் திருச்சி டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, திருவாரூர் , தஞ்சை , நாகை , திருச்சி ,புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 9 எஸ்பிக்கள், 10 ஏ டி எஸ் பி ,37 டிஎஸ்பிக்கள், நூற்றுக்கு மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.