காஞ்சிபுரம், ஜூலை. 27 –
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்து வந்த நிலையில் அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது.
அந்த கடனை அசோசியேட் நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக் கொண்டது. இதன் மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக் கொண்டதாகவும், இதில் முறைகேடு நடந்துயிருப்பதாகவும், பாஜக சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்.
இதனிடையே, இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர்க்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பகுதியாக காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் எதிராக காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் அவளூர் நாகராஜன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலந்துக் கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



















