காஞ்சிபுரம், டிச. 01 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் இருந்து உத்திரமேரூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்குழாயில் வெங்கச்சேரி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது வெளியேறி வருகிறது. குடிநீர் வீணாவதை தடுப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் தெரிவித்தும் இரண்டு மாத காலமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுக்குறித்து அவ்வூர் மக்கள் அவர்களிடம் கேட்ட பொழுது இந்தப் பகுதி பேரூராட்சியில் வருவதாகவும், இதற்கு ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
சாலையோரங்களில் குடிநீரானது வீணாகி செல்வதால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.