பொன்னேரி, மார்ச். 13 –
பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலயே பலியானார். அவரது மரணத்துக்கு காரணமான ஒட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் முஸ்லீம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கரிமுல்லா இவரது மகன் ஆபித் (20) இவர் சோழவரம் பகுதியில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளான கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெள்ளியன்று இரவு பணி முடிந்து தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆண்டார்குப்பம் பகுதியில் வேகாமகவும் கவனக் குறைவாகவும் லாரியை ஓட்டி வந்த ஒட்டுநர் ஆபித் பின்னால் மோதியதில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்டு 3 நாட்களாகியும் லாரி ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது எந்தவித நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை எனக்கூறி, முஸ்லீம் நகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி-செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.சாரதி, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என, உறுதியளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பும் சிறிது நேரம் பரபரப்பும் நிகழ்ந்தது.





















