புதுவை, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் …
புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 26). இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் புதுவை கடற்கரை சாலையில் பலூன், பொம்மை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று இவர்கள் வழக்கம் போல கடற்கரை சாலையில் வியாபாரத்திற்கு வந்துள்ளனர். நேரு சிலை அருகே அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அப்போது 4 வயது பெண் குழந்தை அருகில் விளையாடிக்கொண்டிருந்தது.
திடிரென குழந்தை காணவில்லை. இதனால் பதறி போன முத்துபாண்டியும், அவரது மனைவி விஜயலட்சுமியும் அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. குழந்தை காணாமல் பெற்றோர்கள் தவித்ததால் அங்கு கூட்டம் கூடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியக்கடை ஆய்வாளர் ஜெயசங்கர், உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அச்சம்பவம் குறித்து விசாரணை மேற் கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், 2 வாலிபர்கள் செல்வதும், குழந்தை அவர்கள் பின்னால் செல்வதும் பதிவாகியுள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வாலிபர்கள் யார் அவர்கள்தான் குழந்தையை கடத்தி சென்றார்களா? என்றவாறு பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.