தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை உலுக்கிய கொலை சம்பவத்தில், நண்பனை கொலை செய்த ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கடந்த 2021ம் ஆண்டு சு.மணி என்பவரை கொலை செய்து, அவரது தலையை தனியாக வெட்டி எடுத்து வந்து தஞ்சை அடுத்துள்ள ரெட்டிபாளையம் காளி கோவில் வாசலில் ஒரு கும்பல் வைத்து விட்டு சென்றது. அச் சம்பவம் அப்போது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அக் கொலையை தஞ்சை ரெட்டிபாளையம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற கொடுக்கு சதீஷ் தலைமையிலான கும்பல் செய்தது. என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. சு.மணி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 13 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்தனர்.
பின்னர் அனைவரும் ஒன்றாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கள் நண்பனை பார்க்க வந்தனர். அப்போது, சதீஷை பின் தொடரந்து வந்த ஒரு கும்பல் சதீஷிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது தூரம் சென்றதும் அக்கும்பல் மறைத்து வைத்திருந்த அருவாளால் சதீஷை வெட்ட முயன்றுள்ளது. அப்போது சுதாரித்து கொண்ட சதீஷ் அக் கும்பலிடம் இருந்து தப்பி ஓடி ஒரு கடைக்குள் புகுந்துள்ளார். பின் தொடர்ந்து வந்த கும்பல் சதீஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. அதனை கவனித்த சதீஷ் உடன் வந்த நண்பர்கள் குற்றுயிரும், கொலை உயிருமாக கிடந்த சதீஷை தங்களது தோளில் போட்டு கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவுள்ளனர்.
மருத்துவமனையில் சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் நடந்த அக்கொலை சம்பவம் தஞ்சையில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
நண்பனை கொலை செய்தவனை பழி தீர்த்து கொண்ட சு.மணியின் நண்பர்களான ஸ்டாலின், முத்துக் குமார், டக்ளஸ் மணி, அலெக்ஸாண்டர், குரு பிரசாத், மொட்டை மணி, மதன், செந்தில்குமார் ஆகிய 8 பேரை காவல் துறையினர் இன்று கைது செய்து உள்ளனர்.





















