சீர்காழி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக திருமுலைப்பால் உற்சவம் கடந்த 15 ஆம் தேதி நடந்தது. உற்சவத்தின் நிறைவாக முத்து சட்டைநாதர் உற்சவத்தில் நள்ளிரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக வசந்த மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் முத்து சட்டைநாதர் சுவாமி புஷ்ப விமானத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரியுடன் சுவாமி புறப்பாடு நடந்தது. கோவில் பிரகாரம் முழுவதுமாக உலா வந்து மீண்டும் யதாஸ்தானம் எழுந்தருளி சகஸ்ரநாம அர்ச்சனையும், புஷ்பாஞ்சலியும் மகாதீபாரதனையும் நடந்தது.
முன்னதாக பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக முத்து சட்டை நாதர் சுவாமிக்கு பட்டு சாத்தி தீபாராதனையும் பின்னர் மலை மீது அருள்பாளிக்கும் சட்டை நாதர் சுவாமிக்கு தீபாராதனையும் நடந்தது.
நள்ளிரவு மூன்று மணி வரை நடைபெற்ற உற்சவத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






















