ஆவடி, மார்ச். 30 –
இன்று ஆவடி சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்டோ வாகன உரிமை பதிவு, ஓட்டுநர் உரிமை ஆவணங்கள் மேலும் யூனிபார்ம், மற்றும் மீட்டர் தொடர்பான சோதனை நடவடிக்களை அதிரடியாக மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ஆட்டோ வாகனங்களை சோதனையிட்டு போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி சுற்றுப்பகுதிகளில் தினந்தோறும் 1000 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் போக்குவரத்து வந்து போகும் பகுதியாகும் இந்நிலையில் அந்த ஆட்டோக்களின் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டன் துணை ஆய்வாளர் கோபால் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம், பட்டாபிராம் எம்ஜிஆர் சிலை மற்றும் ஆவடி செக்போஸ்ட் பகுதிகளில் வாகனச்சோதனை நடத்தினார்கள்.
அப்போது பல்வேறு ஆட்டோக்கை நிறுத்தி இன்சூரன்ஸ், ஆர்.சி புத்தகம், ரோடு டாக்ஸ், ஆட்டோ ஓட்டுநர் உரிமை ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி பரிசோதனை செய்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் சரியான முறையில் காக்கி சீருடை அணிந்து இருக்கிறார்களா எனவும் சோதனைச் செய்தார்கள். இச்சோதனையில் சரியான ஆவணங்கள் இல்லாதவர்களிடம் தண்டத்தொகை வசூலிக்கப்பட்டது.
மேலும், இச்சோதனையின் நோக்கம் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் போலி ஆவணங்களை வைத்து கொண்டு குற்றச்செயல்களுக்கு பயன் படுத்தப்படும் வாகனங்களை கண்காணிப்பதற்கான முக்கிய வாகனச் சோதனை என தெரிய வருகிறது. மேலும், இப்பகுதியில் பல்வேறு குற்றங்கள் நடைப்பெறாமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையாகும், மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கானதாக கண்காணிப்பு நடவடிக்கையெனவும் கூறப்படுகிறது.
இச்சோதனைகள் வெறுமனே மாதக்கடைசியில் வசூல் வேட்டைக்காக நடத்தப்படும் சோதனையாக இருந்து விடக்கூடாதென அப்பகுதி மக்கள் மற்றும் உண்மையான ஆட்டோ தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் இப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து இப்பகுதியில் நடத்தி குற்ற நிகழ்வுகள் நடைப்பெறாத வகையில் தடுக்கும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை காவலர்கள் ஈடுப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.






















