திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அப்பள்ளியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நீண்ட காலமாக இருந்து வரும் அப்பிரச்சினை தொடர்பாக அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே ஜி முரளிதர், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டவர்கள் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் உதயமலர்- பொன். பாண்டியன் ஆகியோரிடம் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தினை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி தந்தது. அவ்விடத்தினை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் நகராட்சி ஒதுக்கி தந்த இடத்தில் 50 சென்ட் நிலத்தில் புதியப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காகவும் மீதமுள்ள 30 சென்ட் இடத்தினை விளையாட்டு மைதானமாக கட்டுவதென முடிவெடுத்தது.
அதன் முதல் கட்டமாக திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் பெறப்பட்டு பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் உதய மலர் பொன்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், நகராட்சி ஆணையர் சுபாஷினி, பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளிதர் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர். சிறப்புமிகு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.






















