பொன்னேரி, டிச. 13 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி ஆற்றங்கரையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் அனைவரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அருகாமையில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு புயல் கரையை கடந்து மழைநீர் வடியும் வரை அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தது.
தொடர்ந்து வெள்ள அபாயம் நீங்கிய பின்பு 80 குடும்பத்தினரையும் கிராமத்திற்குள் மீண்டும் அழைத்து சென்று அவரவர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சார்பில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
. அதன்படி 80 குடும்பத்தினருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராசன் அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கினார்.
பொருட்களை வழங்கிய பின் நரிக்குறவர் மக்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவிக்கும் வகையில் போன் செய்தனர். போனை உடனே எடுத்து உதயநிதி ஸ்டாலின் அனைத்து மக்களிடம் நலம் விசாரித்தார். நிவாரண பொருட்கள் வந்து சேர்ந்ததா என கேட்டு அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினார். பின்னர் கிராம மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் ,திமுக நிர்வாகி மா.தீபன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

















