கும்பகோணம், ஆக. 12 –
கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன், நந்தியை சற்று விலகி இருக்க கட்டளையிட்ட ஸ்தலமுமான இச்சிறப்பும் பெருமையும் பெற்றதாக தலமாக இத்திருக்கோயில் விளங்கி வருகிறது.
மேலும் இத்திருக்கோயிலில் உள்ள துர்கையம்மன் வடக்கு முகம் நோக்கி மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் அன்னையாக அருள்பாலிக்கிறார். ராகு பகவானுக்கு அதிதேவதையாக துர்க்கையம்மன் விளங்குவதால் தங்கள் பிராத்தனைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற எலும்பிச்சபழ விளக்கேற்றியும், நெய் விளக்கேற்றியும் ராகு கால நேரத்தில் வழிபடுவதால் இது ராகு தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இத்தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பந்தல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகயிருந்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற துர்க்கை ஸ்தலத்தில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல், ஏராளமானோர் தீபங்கள் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.
























