சென்னை, ஜூன். 25 –
முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைப்பெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடப்பு மாதம் ( ஜூன் ) 30 ஆம் தேதி நடை பெறயிருக்கிறது. அதனை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 44 வது ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 வகையான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நடத்தப்படும் என்றார். அதன்படி அவ்விளையாட்டுப் போட்டிகள் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைப்பெற்றது.
இந்நிலையில் மாவட்ட அளவில் நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் மூன்று இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 25 ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான விளையாட்டுப்போட்டிகள் மாநில அளவில் நடைப்பெறவுள்ளது.
மேலும் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைப்பெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக தனியார் விடுதிகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைப்பெறும் அனைத்து நாட்களிலும் மூன்று வேளை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போட்டி நடைப்பெறும் இடங்களில் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி நடைப்பெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் மருத்துவ்வசதிகள் அனைத்து இடங்களிலும் செய்து தர ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இம் முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான விளையாட்டு போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்திடும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகர போக்குவரத்து கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.





















