திருவாரூர், மே. 28 –
திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வேலை நிமித்தமாகவும், கல்வி சம்பந்தமாகவும் திருவாரூருக்கு வந்து செல்கின்றனர்.
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நன்னிலம், நாகூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் இதே வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்களிலும் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிகட்டுகளில் தொங்கிய படி பயணம் மேற்கொள்கிறார்கள். படிக்கட்டுகள் மட்டுமின்றி பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள், பேருந்தின் பின்புறம் உள்ள படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். மாணவர்கள் தான் இவ்வாறு பயணம் செய்கிறார்கள் என்றால் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவிகளும் வேறு வழியின்றி இதே போல் பயணம் தான் செய்கின்றனர்.
காலை நேரத்தில் தான் பஸ்களில் கூட்டம் இருக்கிறது என்றாலும் மாலையிலும் அதே போல் தான் கூட்டமும் உள்ளது. இதனால் பேருந்துகளை மெதுவாக தான் இயக்குகின்றனர்.
இருப்பினும், சில நேரங்களில் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற் கொள்ளும் மாணவ, மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குவதையும் காணமுடிகிறது.
அதனால் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அம்மாணவர்களை திட்டியும் அவர்கள் நிலைக்குறித்து அச்சத்துடனும் செல்கின்றனர்.
மேலும், தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நேரத்திலும் திருவாரூரில் இருந்து நன்னிலம், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூர் அருகே நேற்று இரவு சேந்தமங்கலம் பகுதியில் ஒரு தனியார் பேருந்தில் இளைஞர்கள் சிலர் பேருந்தின் பின்பக்க ஏணியில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.
அதனைக் கண்ட அவ்வழியாக வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எனவே பள்ளி நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். எனவும்,
மேலும் இப்பிரச்சினைக் குறித்து போக்குவரத்து காவல்துறையினரும் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்பவர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் எனவும் மேலும் அரசுக்கும் இவ்வழித்தடங்களில் அதிகப்படியான பேருந்துக்களை இயக்கும் படி பரிந்துரை செய்திட வேண்டும் எனவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும்பொதுமக்கள் என அனைவரும் மாவட்டம், துறைச்சார்ந்த நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு இப்பிரச்சனையை முன்னிறுத்தி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைப்பெறும் முன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூரில் இருந்து செய்தியாளர் ஆரூர் நாகராஜ்






















