பொன்னேரி, மே. 07 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் பனை மரத்தின் பெருமை மற்றும் அதனைப் பேணி பாதுகாத்திட வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அப்பகுதியில் இயற்கை அரண் சமூகநல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பனை திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பனை மரத்தின் சிறப்புகள் குறித்தும், மேலும் இப்பனை மரத்தினால் மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும், இந்நிகழ்வில் பங்கேற்ற அடுத்த தலைமுறையினருக்கு, பனை மரத்தால் பயன் பெற்ற அப்பகுதி மூத்த குடிமக்கள் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.
இந்நிகழ்வில் கங்கேற்ற அனைவருக்கும், பனை நுங்கு வழங்கப்பட்டது. பனை ஓலைகள் மற்றும் அப் பனை மரத்திலிருந்து பெறப்படும் அனைத்து வித பொருட்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப் படுத்தியிருந்தனர்.
மேலும் அதனை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆவலுடன் கண்டு களித்தனர். இயற்கை அரண் பனை குழு தலைவர் ஏகாட்சாரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத் தலைவர் எத்திராஜ், பழவேற்காடு வார்டு உறுப்பினர்கள் முகம்மது சம்மது, ஹாரூண், முஜிப் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மகேஷ், மோகன், மோகன்ராஜ், கற்பகம், ஆறுமுகம் சமூக ஆர்வலர்கள் ராமு, முரளி, முருகன், பாடகர் யூசுப், தேசிங்கு, பிச்சைமுத்து, சதாம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.























