திருவாரூர், ஜன. 12 –
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற உள்ளதாக பாரம்பரிய நெல் மாநாட்டு கழக நிறுவனர் ரகுநாதன் அறிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடத்துவதுக் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரம்பரிய நெல் மாநாட்டு குழு மற்றும் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாரம்பரிய நெல் மாநாட்டு கழக நிறுவனர் ரகுநாதன் தெரிவிக்கும் போது,
பாரம்பரிய நெல் மாநாட்டு குழு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டினை மார்ச் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் நடத்திட திட்டமிட்டுள்ளது எனவும்,
மேலும், இம்மாநாட்டின் மூலம் பாரம்பரிய அரிசி வகைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றிய ஆய்வை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாரம்பரிய விவசாயித்தினை அதிகப்படுத்திடவும், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிமுறைகளையும், விவசாயிகளுக்கு வழங்கிட உள்ளதாகவும் இதனால், இயற்கை விவசாயப் பரப்பளவை அதிகப்படுத்தி தமிழ்நாட்டை இயற்கை விவசாய மாநிலமாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், நுகர்வோருக்கு பாரம்பரிய அரிசியில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் பற்றி ஆய்வு முடிவுகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம், பாரம்பரிய அரிசிக்கு சந்தையில் நல்ல வாய்ப்பு உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அப்போது பாரம்பரிய நெல் மாநாட்டுக் கழக நிறுவனர் ரகுநாதன் தெரிவித்தார்.


























