கும்பகோணம், நவ. 27 –
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தஞ்சாவூர் கும்பகோணம் சாலை புதுப்பிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும், இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு கட்சியினர் சார்பில் நெடுஞ்சாலைத்துறையின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து கண்டனம் தெரிவித்தும், புதிய சாலை அமைத்து தர வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது.. மேலும், ஆர்ப்பாட்டத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சுமார் 15 ஆண்டு காலமாக, விக்கிரவாண்டி தஞ்சாவூர் NH45C தேசிய நெடுஞ்சாலையின் புதிய சாலை அமைப்பதை காரணம் காட்டி, அரசு இந்த சாலையை புதுப்பிக்க முயற்சி செய்யாமல் இருப்பதால், இச்சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் அப்பகுதி துறைச்சார்ந்தவர்கள் சாலைகளில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் விரைந்து தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை புதிய சாலையாக போட்டு தர வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தேமுதிக கட்சி உட்பட பல்வேறு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.



















