கும்பகோணம், அக். 01 –
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்துக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடும் விழாக்களில், நவராத்திரி பண்டிகையும் ஒன்றாகும், அதுப்போன்றே இவ்வாண்டு புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஒன்பது நாட்கள் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து, சுற்றம் சூழ குடியிருப்போரை இல்லத்திற்கு வரவழைத்து பூஜை வழிபாடுகள் செய்து பிரசாதங்களை வந்தோருக்கு பகிர்ந்தளிப்பது இவ்விழாவின் மற்றொரு சிறப்பாகும்.
இவ்விழாவிற்காக நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே நவராத்திரி கொலு வழிபாடுகள் நாடு முழுவதும் துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ வேத நாராயண பெருமாள் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல் நாள் வரதராஜ பெருமாள், ஸ்ரீ பரமபத நாதர் அலங்காரத்திலும், வேத நாராயண பெருமாள் ஸ்ரீ சூரிய நாராயணன் அலங்காரத்திலும் காட்சியளிப்பர். இரண்டாம் நாள் வரதராஜ பெருமாள் முத்தங்கி சேவை, வேத நாராயண பெருமாள் கிருஷ்ணன் லீலை, அலங்காரத்திலும் காட்சியளிப்பார்கள். மூன்றாம் நாள் ஸ்ரீ அமிர்தம் மோகினி, ஸ்ரீ பூவராக பெருமாள் அலங்காரத்திலும், நான்காம் நாள் நடைப்பெறும் புஷ்பாங்கி சேவையில் ஸ்ரீ துர்கா, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்திலும், ஐந்தாம் நாள் ஸ்ரீ ராமர் பட்சி ராஜசேவை, ஆறாம் நாள் சந்தன காப்பு அலங்காரம், ஸ்ரீ நரசிம்ம அவதாரம், ஏழாம் நாள் பத்மாவதி தாயார் அலங்காரம், ஸ்ரீ வெங்கடாஜலபதி சாமி அலங்காரம், எட்டாம் நாள் ஸ்ரீ வெங்கடாஜலபதி அலங்காரம், தசாவதாரம் அலங்காரம், ஒன்பதாம் நாள் வினை காப்பு அலங்காரம், மூலவர்கள் முத்தங்கி சேவை, ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம், மூக்குத்தி தரிசனம் என ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கமிட்டி நிர்வாகிகள் கமிட்டி அறங்காவலர்கள் மற்றும் சௌராஷ்ட்ரா தர்ம பரிபாலன கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என அனைவரும் சிறப்பாக செய்து வருகின்றனர். இச்சிறப்புமிக்க நவராத்திரி விழாவினைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.





















