திருவாரூர், செப். 21 –
ஜனநாயக முறைப்படியானாலும் சரி, தார்மீக அடிப்படையில் என்றாலும் சரி, அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என திருவாரூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில், தொண்டர்களிடையே எழுச்சியுரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணா பிறந்தநாள் விழாவில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்கின்ற சபதம் ஏற்போம் என்றார்.
மேலும், பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக கட்சி தற்போது குடும்பக் கட்சியாக செயல்பட்டு வருகிறது என்றும், திருவாரூர் மாவட்டத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது எனவும், மேலும்,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் போன்று ஏச்சுகளையும், பேச்சுகளையும் சோதனைகளையும் எந்த ஒரு தலைவரும் எதிர்கொண்டதில்லை என மனமுருகி பேசினார், மேலும் அவைகள் அத்தனையும் கடந்து நான்கரை ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக சிறப்பான ஆட்சியை கொடுத்தார் எனவும் அப்போது குறிப்பிட்டார்.
பேரறிஞர் அண்ணா ஜனநாயகப முறைப்படி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேப்போன்று, தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது, 98 சதவீதம் பேரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி இருந்தது. 2 சதவீத ஆதரவு மட்டுமே ஓபிஎஸ் க்கு கிட்டியது இந்நிலையில் அவரை எப்படி கட்சித் தலைவர் ஆக்குவது என வினா எழுப்பினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திமுகவை எதிர்த்தார் அதிமுகவின் தலைவர் ஆனார், அதேபோன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் திமுகவை எதிர்த்து தலைவரானார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதே வழியில் திமுகவை எதிர்த்து தலைவராகியுள்ளார். எனவே ஜனநாயக முறைப்படி என்றாலும் சரி தார்மீக அடிப்படையென்றாலும் சரி அதிமுகவின் கட்சியின் தலைவர் அவர்தான் என்றார்.
இக்கூட்டத்தில் திருவாரூர் நகர கழக செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ. என் .ஆர். பன்னீர்செல்வம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசைமணி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில் மற்றும் முக்கிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.





















