அத்திப்பட்டு, மே. 31 –
தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பெட்ரோல் நடுவங்கள் செயல்பட்டு வருகின்றன, இதன் விற்பனைக்கு தேவையான பெட்ரோல் டீசல் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன, இதற்கான விளிம்பு தொகையை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், பெட்ரோலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. இதனால் ஏற்கனவே கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்ட பெட்ரோல் டீசல் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் முகவர் ஒருவருக்கு 5 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கான விளிம்புத் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என கோரி முகவர்கள் இன்று ஒருநாள் நாடு முழுவதும் கொள்முதலை புறக்கணித்து முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனம் முன்பாக கொள்முதலை புறக்கணித்து முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவதற்காக முன்பாக தங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் தங்களுக்கான விளிம்பு தொகையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர் மேலும் தங்களது இந்த ஒரு நாள் போராட்டத்தால் மத்திய மாநில அரசுகளுக்கு 200 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.























