காஞ்சிபுரம், ஜூலை. 24 –
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்றி மரகன்றுகளை நடும் விழா நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமையில் பெரியகரும்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தொடர்வண்டி துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் மகேஷ்குமார், உமாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை வரவேற்க்கும் விதமாக பட்டாசு வெடித்து வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
தொடர்ந்து, கோவிந்தவாடி அகரம் பகுதியில் மரகன்று நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் சரிதாபாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் முன்னாள் நடுவன அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மாவட்ட செயலாளர்கள் உமாபதி, மகேஷ்குமார் பங்கேற்றனர்.





















