கும்பகோணம், ஏப். 21 –
திருவாரூர் மாவட்டம் கண்டியூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் சத்துணவை உண்ணுவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர். சென்ற சிறிது நேரத்திலேயே சத்துணவை சாப்பிட்ட சில சிறுவர்கள் மயங்கி விழ ஆரம்பித்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்துள்ளனர்.
மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவ-மாணவிகள் அனைவரையும் தலைமையாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியைகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவலறிந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




















