மீஞ்சூர், ஏப். 06 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட எடக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த அபாயகரமான சூழலலையும் பொருட்படுத்தாது பள்ளி மாணவர்கள் அப்பள்ளியில் தொடர் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி கட்டடம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானதென கூறப்படுகிறது. இந்த பள்ளியில் எடக்குப்பம், ஏரிகாலனி, ஆவூர் காலனி, இலுப்பாக்கம் காலனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப்பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக் கட்டடத்தில் ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழுந்து சூழலில் உள்ளதாகவும் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் உள்ள சுவர்கள் சிறிது சிறிதாக இடிந்து விழுவதால் ஆசிரியர்கள் பயந்து கொண்டு மாணவர்களை அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பயில்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் அங்கன்வாடி கட்டிடத்தின் கூரையும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் செய்வதறியாது அங்கன்வாடிக்கும் பள்ளிக்கும் இடையே உள்ள மர நிழலில் மாணவ மாணவிகளை அமரவைத்து கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். இதனால் மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த பள்ளியின் கட்ட டத்தின் மீதே கவனம் செலுத்தி வரும் மிகவும் கடினமான சூழல் நிலவுகிறது.
ஆசிரியர்களும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பாடம் நடத்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆட்சியர் மேலும் தமிழக அரசும் இதுக்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம மக்களும், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.





















