கும்பகோணம், ஜன. 4 –
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருளானந்தா நகரைச் சேர்ந்த அருண் பாஸ்கர் என்பவரிடமிருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 8 சென்டி மீட்டர் உயரமும் ,560 கிராம் எடையுள்ள பச்சை நிறமான தொன்மையான மரகத லிங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த லிங்கம் குறித்து அருண் பாஸ்கரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், இந்த சிலை எந்த ஆலயத்திற்கு சொந்தமானது என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .
இந்நிலையில் நேற்று மாலை தஞ்சாவூரில் கைப்பற்றப்பட்ட 500 கோடி ரூபாய் மதிக்கத்தக்க மரகதலிங்கம், சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினரின் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி (திருமதி சண்முகப்பிரியா ) யிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட விலை உயர்ந்த மரகதலிங்கத்தை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மரகதலிங்கம் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
சிலை திருட்டு தடுப்பு காவல் துறையைச் சேர்ந்த எஸ்பி திருமதி .பொன்னி, ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் அசோக் நடராஜன் ஆகியோர் விலை உயர்ந்த மரகதலிங்கத்தை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இயந்திரத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர்.


















