பொன்னேரி, மார்ச். 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மாபூஸ்கான் பேட்டையில் புதியதாக அமைய உள்ள பைரம் கான் மஸ்ஜித் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியில் சென்னை மாகாணத்தை ஆண்ட சாதுல்லாஹ்கான் நவாப் வாரிசுகள் சுமார் 1600 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து மசூதி நடத்தி வந்துள்ளனர். அதன் பின்பு 1700 களில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆற்காடு நவாப் அன்வர்தீன் கான் அவருடைய மூத்த மகன் மாபூஸ்கான் அவருடைய தம்பி வாலாஜா நவாப் முகமது அலியின் ஆணை பெற்று, ஞாயிறு கிராமத்தில் ஒரு பகுதியை வாங்க மேல்வரம் குடிவரம் இரண்டையும் பெற்று தன்னுடைய பெயரிலேயே மாபுஸ்கான் பேட்டை எனும் பெயரை வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் வழி தோன்றல்களாக தற்போது வசித்து வரும் சாதுல்லா மற்றும் உபையதுல்லா ஆகியோர் முயற்சியால் புதிய பள்ளிவாசல் எனப்படும் மசூதி கட்டுவதற்காக ஏற்பாடு செய்தனர். அதற்காக பைரம் கான் மத்ரஸா-இன்-மஸ்ஜிதே டிரஸ்ட் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் மற்றும் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச்.அசன்மௌலானா ஆகியோர் நேரில் வருகை புரிந்து அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற சி.ஜி.பி அலுவலக கண்காணிப்பாளர் கே.எஸ்.ரவி, திருவள்ளூர் மாவட்ட அரசு காஜி மௌலவி முஹம்மது அலி மாண்பஹீ, அரசு வழக்கறிஞர்கள் தேவேந்திரன், அமரத்காந்தி, ஞாயிறு – அருமந்தை ஒன்றிய கவுன்சிலர் மொழியரசி செல்வம், மாபூஸ்கான் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், துணைத்தலைவர் சௌந்தர்ராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்தப் பள்ளிவாசலின் தலைவர் சாதுல்லா மற்றும் நிர்வாகிகள் தினேஷ்குமார் ஜமிலாபாத் மௌலவி அப்துல் ஹக்கீம் காஷிபி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.























