திருவண்ணாமலை, செப்.9–
திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறுவதற்கான 100 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் பேசுகையில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்ங்களின்கீழ் உதவித்தொகையாக மாதம் ஓய்வூதியம் 1000 வழங்கப்பட்டு வருகிறது
இத்திட்டத்தின் மூலம் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம் இந்திராகாந்தி தேசிய விதவை திட்டம் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவி திட்டம், ஆதரவற்ற விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, ஆதரவற்ற மாற்றுத்திறனாளி உதவித்தொகை போன்ற உதவித்தொகைகள் பெற முடியும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் ரேவதி, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.கோபால், ஏ.அன்பழகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலக உதவியாளர் ஆர்.சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகர கிராம நிர்வாக அலுவலர் எம்.விஜயராஜ் நன்றி கூறினார். இதேபோல மாவட்டத்தில் 11 தாலுக்கா அலுவலகங்கள் மூலம் சிறப்பு முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.