திருவாரூர், அக். 05 –
திருவாரூர் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பாக மாநில அளவிலான 51 வது மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் துவங்கியது. இப்போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 27 மாவட்டங்களை சேர்ந்த 164 வீராங்கனைகள் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளனர். ஒன்பது சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டி வருகின்ற 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் மொத்த பரிசுத்தொகையாக ரூ .75 ஆயிரம் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. போட்டியின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தமிழகத்தின் சார்பாக மகாராஷ்டிராவில் நடைபெறும் தேசிய அளவிலான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலாளர் பாலகுணசேகரன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






















