கும்மிடிப்பூண்டி, ஆக. 26 –
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா மூட்டைகளை கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக தமிழக ஆந்திர எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தொடர்ந்து நடத்திவரும் பேருந்து சோதனை நடவடிக்கைகளினால் கடந்த ஏழு நாட்களில் மட்டும் சுமார் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த இரயிலில் கேட்பாரற்று கிடந்த 11 கஞ்சா பொட்டலங்களையும், மூன்று பாலிதீன் கவர்களில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
போலீசாரின் திடீர் சோதனையை அறிந்த கஞ்சா கடத்தல் கும்பல் லாவகமாக இரயிலில் இருந்து தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது இதனால் கடத்தல் கும்பலை கைது செய்ய முடியவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சோதனையின் போது மொத்தம் 25 கிலோ கஞ்சாவை கைப்பற்றி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கஞ்சா கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருவதாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.