பெரியபாளையம்,டிச. 21 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கீழே விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார கம்பியை அவ்விரு பசுமாடுகள் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
அப்போது அங்கு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த சுகுமார் அதிர்ஷ்டவசமாக அவ்விபத்தில் இருந்து உயிர் தப்பித்தார். மேலும் அச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் மின்வாரிய ஊழியர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவ்விபத்துக் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த மின் கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் முறையாக சீரமைக்காததால் இதுபோன்று விபத்துக்கள் அடிக்கடி நடைப்பெற்று கால்நடைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த மின்கம்பிகளை அகற்றி புதிய உயிர் அழுத்த மின் கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து அவ் விபத்து தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.