கும்பகோணம், ஜூன். 09 –
கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் முதல் மேயராக இருப்பவர் சரவணன் இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இவரை மேயராக தேர்வு செய்த பின் இவருக்காக தின வாடகைக்கு இன்னோவா கார் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 28-03-22 அன்று நடைபெற்ற மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பயன்படுத்த உள்ள வாகனத்திற்கு விலைப்புள்ளி வாங்கும் பணிக்கான மாற்று ஏற்பாடாக மேயருக்கான வாகனம் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள விலை விகிதத்தில் உள்ளூர் வாகன ஏற்பாட்டாளர் மூலம் வாகனம் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளும் பணிக்காக ரூ 38 லட்சம் அரசின் சிறப்பு நிதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாப்பூர் ஆதம் தெருவை சேர்ந்த மாலினி என்பவரது இன்னோவா காரை வாகன ஏற்பாட்டாளர் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ 3800 வீதம் வாடகைக்கு அமர்த்தபட்டுள்ளது.
இந்த சொகுசுக் கார் வாங்கி ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த காருக்கு இன்சூரன்ஸ் எஃப்சி உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. மாநகராட்சியின் மேயர் சரவணன் பயன்படுத்தும் காருக்கு எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது .
மாநகராட்சியில் அரசு சிறப்பு நிதியில் இருந்து 38 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை மேயருக்கான புதிய கார் வாங்காமல் ஆவணங்கள் இல்லாத வாடகை காரை பயன்படுத்தி வருவது என்பது அங்குள்ளவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது .
மாநகராட்சி மேயருக்காக வாடகைக்கு கார் ஏற்பாட்டை செய்த மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தபட்ட காருக்கு ஆவணங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்காதது ஏன் என்ற குற்றச்சாட்டும் அங்குள்ளவர்களிடம் பரவலாக நிலவி வருகிறது. உடன் இதுக்குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.






















