ஐதராபாத்:

ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோப்பைக்கு முன்பு இரு அணிகளும் தன்னை முழுமையாக இந்த தொடரில் பயன்படுத்திக் கொள்ளும்.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் வீராட்கோலி 4-வது வரிசையில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சமீபத்தில் யோசனை தெரிவித்து இருந்தார். ஒருநாள் போட்டியில் அவர் தற்போது 3-வது வரிசையில் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் ரவி சாஸ்திரியின் யோசனைக்கு வீராட்கோலி பதில் அளித்து உள்ளார். நேற்றைய பயிற்சிக்கு பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

நான் 4-வது வரிசையில் விளையாட தயார். பல முறை நான் அந்த வரிசையில் ஆடி இருக்கிறேன். இந்த வரிசையில் ஆடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்.
3-வது வரிசையில் இருந்து 4-வது வரிசையில் ஆடுவதால் எனது ஆட்டத்தில் மாற்றம் வந்து விடப் போவதில்லை. ஆட்டத் திறன்தான் முக்கியம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி விளையாடுவது என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

இவ்வாறு வீராட்கோலி கூறியுள்ளார்.

30-வயதான வீராட்கோலி 222 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,533 ரன் எடுத்துள்ளார். சராசரி 59.50 ஆகும். 39 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.
3-வது வரிசையில் அவர் 162 ஆட்டத்தில் 8440 ரன் (சராசரி 62.90) எடுத்துள்ளார். இந்த வரிசையில் தான் அதிகபட்சமாக 183 ரன் குவித்தார். 32 சதமும், 39 அரை சதமும் அடித்துள்ளார். 4-வது வரிசையில் அவர் 37 ஆட்டத்தில் 1744 ரன் எடுத்துள்ளார். 7 சதமும், 8 அரை சதமும் அடங்கும். புள்ளி விவரப்படி வீராட் கோலி 3-வது வரிசைக்கே பொருத்தமானவர். அதில் தான் அவர் அதிகமான சாதனைகளை புரிந்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here