மன்னார்குடி, மே. 12 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலத் திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 42 ஆம் ஆண்டு செண்பகப்பூ உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.
சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்திய சிறுதொண்ட நாயனாரின் பக்தியை மெட்சிய சிவபெருமானிடம் வரம் கேட்ட சிறுதொண்டர் தனக்கு உதவி செய்த வாதாபி கொண்டான் எனும் பெயர் பெற்ற நரசிம்ம வர்மனுக்கு வரம் அருள வேண்டுமென அப்போது அவர் சிவப்பெருமானிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு சிவபெருமான் தனது மகனையே துண்டு துண்டாக வெட்டி கறி சமைத்து தன் மீதான பக்தியை வெளிப்படுத்திய சிறுத்தொண்டருக்கு முக்தி அடைந்த நாள்முதல் 21 வது நாள் திருவோண நட்சத்திரத்தில் வாதாபி கொண்டான் எனும் நரசிம்மவர்மன் மோட்சம் பெற்ற நாள் செண்பகப்பூ உற்சவமாக கொண்டாடப்படும் என அப்போது சிவபெருமான் அவரிடம் வரம் அளித்தார் என இந்துப் புராணங்களும் இத்தல வரலாறும் தெரிவிக்கின்றது.
மேலும் அந்நாளை போற்றும் வகையில், நேற்றைய தினம் மன்னார்குடி அருகே உள்ள திருப்பாலக்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோவிலில் செண்பக பூ உற்சவம் நடைபெற்றது. அப்போது ஸ்ரீ உத்ராபதிஸ்வரர் ரிஷப வாகனத்தில் செண்பகப்பூ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, திருப்பாலக்குடி கிராமத்தில் உள்ள பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்த சுவாமியை பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்நிகழ்வின் போது, திரளான அக்கிராம மக்கள் வருகை தந்து இவ் வீதிவுலாவில் பங்கேற்றனர்.